Friday 10 January 2014

கூட்டணிகளும் கொள்கைகளும் ! ! !


கூட்டணிகளும் கொள்கைகளும் ! ! !

கடவுள் மறுப்பு, நால் வருண எதிர்ப்பு சுயமரியாதை மற்றும் பகுத்தறிவுப் பிரச்சாரம் போன்ற கொள்கை வழிகளின் அடிப்படையில் தோன்றி வளர்ந்தவை தான் தமிழக திராவிட கட்சிகள். பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள் இந்த கொள்கை வழியில் உறுதியாக செயல்பட்டதின் காரணமாகவே தமிழகம் போற்றும் மக்கள் தலைவர்களாக இன்றளவிலும் திகழ்ந்து வருகின்றனர். தொடர்ந்து திராவிட கட்சிகளின் ஆளுமையின் கீழ் தமிழகம் இருந்து வருவதற்கும் இவர்களின் கொள்கைத் தாக்கமே பிரதான காரணம்.
ஆனால், இன்றைய தமிழக திராவிட கட்சிகளோ......? தங்கள் சுயநலன்களே பிரதானம் என்ற சூழலில் அந்த தலைவர்கள் உயர்த்திப் பிடித்த சுமரியாதைக் கொள்கைகளை காற்றிலே பறக்கவிட்டு விட்டு இந்துத்வா கொள்கைகளை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க உடன் மாறி மாறி கூட்டணி வைத்துக் கொண்டே வருகின்றன. இப்போது மதிமுக அந்தக் கடமையை சிரமேற் கொண்டுள்ளது.
ஆனால், பகுத்தறிவுப் பாரம்பரியமிக்க தமிழக மக்கள் இத்தகைய கொள்கை குளறுபடி கூட்டணிகளை என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை. அவர்கள் இத்தகைய கொள்கைத்தடம் புரளும் திராவிடக் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்களிடம் ஒரு சில விளக்கங்களை எதிர்பார்க்கிறார்கள்.

# நீங்கள் இது வரையிலும் உயர்த்திப் பிடித்து வந்த சுமரியாதைப் பகுத்தறிவுக் கொள்கைகள் என்னவாயின ?

# நால்வருண அடிப்படையிலான ‘இந்துத்வா’ கொள்கைகளை ஏற்றுக் கொள்கிறீர்களா ?

# ‘அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா’ என்ற வசதியான கொள்கை வழிக்கு வந்துவிட்ட சூழலில்......பெரியார், அண்ணா போன்ற தலைவர்களை அவ்வப்போது தொட்டுக் கொள்வதை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள். ‘திராவிட’ என்ற வார்த்தைப் பிரயோகத்தையும் தங்களது கட்சிகளின் பெயர்களில் இருந்து விலக்கி வையுங்கள். அந்த உன்னத சுயமரியாதை இயக்கத் தலைவர்களுக்கு நீங்கள் செய்யும் குறைந்தபட்ச நன்றிக்கடன் இதுவாகத்தான் இருக்க இயலும்.

சேது சமுத்திர திட்டம், ராமர் கோவில், பொது சிவில் சட்டம் உள்ளிட்ட வேறுபல பிரச்சினைகளிலும் இத்தகையதொரு புதிய கூட்டணி சூழ்நிலையில் உங்களது புதிய நிலைபாடுகள் என்னவென்று தெரிந்து கொள்ளவும் தமிழக மக்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். விரைவில் விடை கொடுங்கள்.

No comments:

Post a Comment